முடிவுறாத ஓவியத்தின்
அமைதியின்மை
இப் பெருங்கடலில்
பரமனின் விந்தினை ஏந்தும்
நிலப் பெண்ணின் யோனியாய்
தளும்பும் கடலின் மீது
சாத்தானின் போர்வையென
கவிழும் இரவில்
நடுங்கிக் கொண்டிருக்கிறது
கருநீல நிச்சலனம்
புறப்பட்ட இடத்திற்கும்
சேருமிடத்திற்கும்
சம தொலைவிலான நடுக்கடலில்
என் கலம்
தூர ஆழத்தில்
அசையும் நிலத் திட்டு
என் வருகை பற்றிய
உன் கனவுகளைச்
சூறையாடும் பேரலைகளை
அனுப்பி வைக்கிறது
இவ்விரவில்
கரையிலிருந்தபடியே நிமிர்ந்து பார்
நம் பார்வைக் கோடுகள்
வெட்டிக் கொள்ளும்
ஒற்றைப் புள்ளியாய்
மிதக்கிறது கடைசி நிலவு.
2 கருத்துகள்:
பின்னூட்டத்தின் வழி வந்தேன். உங்கள் கவிதைகளை முன்பும் வாசித்திருக்கிறேன். உயிர்மையில் என்று நினைக்கிறேன்.
"கடலின் மீது
சாத்தானின் போர்வையென
கவிழும் இரவில்
நடுங்கிக் கொண்டிருக்கிறது
கருநீல நிச்சலனம்"
என்ற வரிகளை ஒரு காட்சியாகக் காணமுடிகிறது.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி..தொடர்ந்து எனது வலைப்பூ பக்கம் வாருங்கள்..
கருத்துரையிடுக